திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.59 திருமாற்பேறு (திருமால்பூர்) - திருக்குறுந்தொகை
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.
1
ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.
2
துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.
3
தீத வைசெய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.
4
வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.
5
பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.
6
மழுவா லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.
7
முன்ன வனுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.
8
வேட னாய்விச யன்னொடும் எய்துவெங்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருத்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.
9
கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.60 திருமாற்பேறு (திருமால்பூர்) - திருக்குறுந்தொகை
ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி அவரவர் உள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
1
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.
2
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
3
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
4
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
5
ஈட்டு மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
6
ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவார்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com